அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பான செயல்பாடுகள் 1980 முதல் 1990 வரை
1980-88 ஆம் ஆண்டுகளில் நான் கற்கும் காலத்திலேயே இந்தக் கற்பிக்கும் பணியும் தொடங்கி விட்டது. என் கல்விக் காலத்திலேயே அருகிலிருக்கும் சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து என்னால் முடிந்த அளவு கற்பிக்கத் தொடங்கினேன். என் வீட்டிலேயே வீட்டைச் சுற்றி இருந்த மாணவர்களுக்குக் காலை மாலை பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். ஒரு சிலர் சிறிதளவு பணம் கொடுத்தாலும் பலருக்கு இலவசமாகவே கற்பித்தேன்.
அதே காலக்கட்டத்தில் என் பகுதியில் பாதியில் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்களைப் பத்தாம் வகுப்புத் தேர்வெழுத ஊக்கப் படுத்தியதோடு, அரசுத் தேர்வெழுதப் பணம் கொடுத்து, இரவு நேரங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து பத்தாம் வகுப்பு, +2 அரசுத் தேர்வு எழுத வைத்துள்ளேன்.
இதன் வளர்ச்சியாக 1989 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் பாம்பாட்டித் தெருவில் பாரதி தனிப்பயிற்சி மையம் தொடங்கி, பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவித்ததோடு, தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து சிறந்த முறையில் அவர்களைத் தேர்ச்சி பெறச் செய்துள்ளேன்.
ஓய்வு நேரங்களில் பள்ளிக் குழந்தைகளின் புத்தங்களுக்குக் கட்டடம் கட்டித் தந்து (பைண்டிங்) அதில் கிடைக்கும் வருவாயையும் ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தியுள்ளேன்.
1990 ஆம் ஆண்டுவாக்கில் சொந்தமாக பட்டதாரிகள் ஊறுகாய் என்ற பெயரில் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து அந்த வருமானத்தையும் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்குப் பயன்படுத்தியுள்ளேன். என்னால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்து அந்த வருமானத்தை ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தி வந்தேன்.
1991 முதல் 1997 வரை
1991-இல் ஆசிரியப் பணியில் காலடி எடுத்து வைத்தேன். நான் வாங்கிய மாத ஊதியம் வெறும் 250 ரூபாய்தான். ஆனால் அங்கு எனக்குக் கிடைத்த மாணவச் செல்வங்களோ, என் வாழ்நாளில் மறக்க இயலாதவர்கள்.
என் ஊதியத்தின் பெரும் பங்கு மாணவர்களின் தேர்வுகளுக்கும், பள்ளிக் கட்டணங்களுக்கும் செலவிடப்பட்டன.
1992 முதல் தொன்போசுகோ பள்ளியில் தமிழாசிரியர். சம்பளம் நான்கு மடங்கானது. பள்ளிக்காக ஏறக்குறைய அனைத்து பணமும் சேமிப்பானது. அந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து செலவு செய்து படிக்க வைக்க எண்ணினேன்.
“ஏழை மாணவர்களின். பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதோடு படிப்புக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வது. ஆனால் அவரவர் வீடுகளில் தங்கி படிப்பது” என்ற புரிதலோடு ஒன்று, இரண்டு, என ஏறக்குறைய பத்து மாணவர்களைத் தேர்நதெடுத்துப் படிக்க வைத்தேன்.
1997 முதல் 2008 வரை
1997-இல் இதற்கு நல்ல வாய்ப்பாக சிங்கையில் தமிழாசிரியர் பணி இறைவன் அருளாலும், என் மாணவர்களின் ஆசியாலும் எனக்குக் கிடைத்தது.
இன்று, என்னுடைய வளர்ப்புப் பிள்ளைகளில் ஒரு தமிழாசிரியரும், ஒரு ஓவியரும் தங்கள் படிப்பை முடித்துள்ளனர். மொத்தத்தில் இரண்டு தமிழாசிரியர், இரண்டு செவிலியர், இரண்டு ஓவியக் கல்லூரி மாணவர்கள், ஒரு கணிப்பொறி வல்லுநர், என படிக்க வைத்து அனைவரும் கல்லூரிப் படிப்பை முடிக்க உள்ளனர். அனைத்து செலவுகளும் என் தனிப்பட்ட வருமானத்தில் செய்யப்பட்டன.
கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான கல்விச் செலவுகளைச் செய்து அவர்கள் அனைவரும் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளனர். ஒருவர் தமிழாசிரியர். வேலைக்காகக் காத்திருக்கின்றார். ஒரு ஓவியர் மைசூரில் வேலை செய்கின்றார். இதன் மூலம் அவருடைய குடும்பம் நல்ல நிலையை அடைந்துள்ளது. கல்வியின் வாயிலாக ஒரு குடும்பம் அடைந்துள்ள முன்னேற்றத் தினை நேரில் காண முடிகின்றது.
இப்படியாகத் தொடர்ந்த என் பணிகளின் அடுத்தக்கட்ட பரிமாணத்தை நோக்கி நகரும் காலம் வந்தது. என் அகலாக் கனவாக என்னுள் உறங்கிக் கிடந்த பள்ளி என்னும் விதை முளைவிடத் தொடங்கியது. 100 ஏக்கர் நிலத்தில் பெரிய பள்ளி கட்டவேண்டும் என்ற ஆசை... மீண்டும் முளைவிடத் தொடங்கியது.
2009 முதல் இன்று வரை
அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கினேன். என்னோடு பேசுபவர்களிடம் எல்லாம் எப்பொழுது பேசினாலும் எனது இந்தக் கனவே கண்முன்னால் விரிந்தது. என் சிந்தனை, உணர்வு, பேச்சு அனைத்தும் பள்ளி பற்றியதாகவே இருந்தது. எத்தனையோ சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், என் உணர்வையும், உள்ளத்து உறுதியையும் மட்டும் இழக்கவில்லை.
ஒவ்வொரு முயற்சியிலும் ஏமாற்றங்களும் தோல்விகளும் வந்தாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தேன். என்னால் முடிந்த அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்.
பள்ளி கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றேன். நல்ல பல உள்ளங்களின் உதவியினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
இவண்,
இளங்குமரன்,
எழுத்தேணி அறக்கட்டளை.