பிரவலூர் ஒரு அமைதியான கிராமம்..
அமைதியும் பசுமையான சூழலும் நிறைந்த ஓர் அழகான வசிப்பிடம்..
ஆடு, மாடு, கோழிகளுடனும் அன்பு பாராட்டி வளர்க்கும் அன்பான தேசம்..
அதிகாலை நேரத்தில் சேவல் கூவ மயிலும் உடன்கூவ, பறவைகளின் குதூகலமான ஓசை கேட்டு எழுந்து விடிவெள்ளி கண்டு மகிழும் அற்புதமான உணர்வுகளை கொண்டது எங்கள் கிராமம்...
இங்கே அடுக்குமாடி வீடுகள் இல்லை..
ஆனால் வீட்டைச் சுற்றி அடுக்கடுக்காக மரங்களும் செடி கொடிகளும் பூத்துக் குலுங்கும் இயற்கையான சூழல் இருக்கிறது..
இங்கே மிகுதியாக வாகனங்கள் கொண்ட இரைச்சலால் காதுகளை கிழக்கு சாலைகள் இல்லை...
மாறாக மரங்களின் கிளைகளில் மிகுதியாக அமர்ந்து கொஞ்சி குலாவும் பறவைகளின் இனிமையான சப்தம் காதுகளை குளிர்விக்கும்..
காய்கறிகள் வாங்க பதப்படுத்தப்பட்டு விற்கும் குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடிகள் இங்கு இல்லை..
ஆனால் விடியற்காலையில் பனிப்பொழிவின் நடுவில் பசுமைமாறா காய்களை பறித்து எங்கள் கிராமத்து வீதிகளில் புதுப்புனலோடு விற்பனை செய்யும் விவசாயி இருக்கிறார்..
மருத்துவ அவசர காலத்தில் அழைத்த பத்து நிமிடங்களில் வரும் 24 மணி நேர அவசர ஊர்திகள் இங்கில்லை..
ஆபத்து என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உறவுகளும், கூப்பிடாமலே வந்து உதவும் அண்டை வீட்டாரும் ஏராளம்..
இங்கு விவசாயமே முதன்மைத் தொழில். பற்பல தலைமுறைகள் தாண்டி இன்று வரை பலருக்கும் வாழ்வாதாரம் விவசாயம்தான்..
விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் அல்ல. எனினும் அதை கைவிட மனம் விரும்புவதுமல்ல.
இங்கு வசதி படைத்த சிலர் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலாபம் குறைவாக இருந்தாலும் சேவை மனப்பான்மையுடன் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்..
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் போற்றபடும் கிராமம்.